Monday, March 10, 2008

புரட்சிகரத் தீவிரவாதம் (Revoutionary Terrorism)

ஆக்கிரமிப்பு செய்திருக்கும் அரசாங்கத்தின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதும், அரசுக்கு சில பொருளாதார, மனித இழப்புகளையும் ஏற்படுத்துவதைத் தவிர வேறு எதையும் சாதித்துக் காட்ட இயலாத ஒரு போராட்ட முறை தான் புரட்சிகர தீவிரவாதம் அல்லது தனிநபர் தாக்குதல்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் போதும் அம்மாதிரியான பல புரட்சிகர நிகழ்வுகள் நடந்தன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

அதற்கு முன் போராளிக்கும் தீவிரவாதிக்கும் உள்ள வேறுபாடுகளைச் சொல்லிவிடுகிறேன்.
இருவருமே ஆயுதம் ஏந்திப் போராடுபவர்கள் தான்.

1. அரசுக்கும் போராடுபவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து விட்டால், அன்று இரவிலிருந்து போராளிகள் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுவார்கள்.

2. உங்களுடைய ஆயுதப்போராட்டம் வெற்றி பெற்றால் நீங்கள் விடுதலைப் போராட்ட தியாகி, தோல்வியடைந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு தீவிரவாதி.

3. ஏதேனும் ஒரு வல்லரசு உங்களுக்கு ஆயுத உதவியும் பயிற்சியும் அளித்து வந்தால் (அதை வைத்து நீங்கள் எத்தனை பேரைக் கொன்றாலும்) உறுதியாக உலகின் பார்வைக்கு நீங்கள் ஒரு போராளி, அதே வல்லரசு உங்களை ஆதரிக்கவில்லையென்றால் நீங்கள் உங்கள் மக்களின் நியாயமான கோரிக்கைக்காக ஆயுதம் ஏந்தினாலும் (கற்பூரத்தைக் கொளுத்தி சத்தியம் செய்கிறேன்) நீங்கள் ஒரு தீவிரவாதி.

முதலில் பகத்சிங்கின் வீரச் செயலைப் பற்றிப் பார்ப்போம்.

1928-ம் ஆண்டுவாக்கில், ப்ரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் எப்படி நடைபெறுகிறது, ஆட்சி முறையில் எதுவும் மாற்றம் தேவைப்படுகிறதா என்று ஆராய ப்ரிட்டிஷ் அரசு சைமன் குழுவைப் பணித்தது.

அந்தக் குழுவை எதிர்க்க இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்கு ஒரே ஒரு காரணம் போதுமனாதாயிருந்தது. "அந்தக் குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லை". சைமன் குழு இந்தியாவிற்கு வரவிருந்த போது கடுமையான எதிர்ப்புகள் இருந்தன.

பஞ்சாபில் நடந்த அப்படி ஒரு போராட்டத்தை முதுபெரும் தலைவர் "லாலா லஜபதி ராய்" தலைமை ஏற்று நடத்தினார். காவல்துறையினர் எப்போதும் போலத் தடியடி நடத்தினர். அந்தத் தாக்குதலில் காயம்பட்ட பெரியவர் லஜபதிராய் காலமானார்.

அப்போது வேர்விட்டு கிளைபரப்பியிருந்த HSRA (Hinduatan Socialist Republican Army) எனும் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் பகத்சிங். பெரியவரின் சாவுக்குப் பழிதீர்க்க முடிவு செய்தார். 17 டிசம்பர் 1928-ல் தடியடிக்குக் காரணமான சாண்டர்ஸ் என்ற காவல்துறை அலுவலரைக் கொலை செய்தனர் பகத்சிங்கும் அவரது நன்பர்களான ராஜ்குரு மற்றும் அசாத் ஆகியோர்.

பின்னர் 1929 ஏப்ரல் 8-ம் நாள் மத்திய அரசு அலுவலகத்தில் பகத்சிங்கும் பி.கே.தத் என்ற நன்பரும் வெடிகுண்டுகளை வீசினர். யாருக்கும் அபாயத்தை விளைவிக்காத அந்த குண்டுகளை வீசிவிட்டுத் தப்பித்து ஓடாமல் சரண் அடைந்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் "லாகூர் சதிவழக்கு" அன்று பெயர் பெற்ற வழக்கில் மரண தண்டனை அளிக்கப்பட்டனர். ஆனால் பொதுமக்கள் அனவரின் அனுதாபத்தையும், அன்பையும் அந்த வீர இளைஞர்கள் பெற்றனர். இந்நிகழ்வு ஓரளவு மக்களின் உணர்வுகளை எழச் செய்தது.
பகத்சிங் சொன்ன வரிகளுள் சிலவற்றை இங்கு சொல்வது அவரின் எண்ணத்தை நன்கு விளக்கும். புரட்சியைப் பற்றிய அவரது கருத்து :

“REVOLUTION does not necessary involve sanguinary strife, nor is there any place in it for individual vendetta. It is not the cult of the bomb and pistol. By REVOLUTION, we mean that the present order of things, which is based on manifest injustice, must change”.

ஒரு புரட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் என்று அவரது கருத்தையும் பார்ப்போம்:

“To be a REVOLUTIONARY, one requires immense moral strength, but also requires criticism and independent thinking. In the struggle for self – emancipation, humanity has to struggle against NARROW CONCEPTION OF RELIGION AS ALSO AGAINST THE BELIEF IN GOD”

மற்ற புரட்சிச் செயல்களை அடுத்த பதிவில் காண்போம்.....

No comments: