கி.மு 210-ம் ஆண்டு அல்லது தி.மு 179.
தமிழகத்திலிருந்து ஈழம் நோக்கிச் சென்றான் ஒரு சோழ இளவரசன். அங்கு சென்று சில நாட்களில் அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த அசீலா என்ற மன்னனைத் தோற்கடித்தான். பின்பு அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு 44 ஆண்டுகள் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தான்.
அவனுடைய ஆட்சியின் கீழ் தமிழர்கள் இருந்தார்கள் என்றாலும் சிங்களர்கள் தான் மிக அதிகம். அற நெறி தவறாமல் ஆட்சி செய்தான். அவனுடைய ஆட்சியில் தமிழர்கள் மட்டுமல்லாது பௌத்த மதத்தைப் பின்பற்றிய சிங்களர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அங்கு இருந்த ஈழச் சிற்றரசன் ஒருவனின் மகன் தான் துட்டகைமனு. என்ன தான் மதச்சார்பில்லாமல் அனைவரும் விரும்பும் நல்ல ஆட்சியாக இருந்தாலும் ஆள்பவன் சிங்களவன் இல்லையே; தமிழன் ஆயிற்றே என்ற எண்ணம் அந்த இளவரசனிடம் இருந்தது. தவறில்லை தான். அந்த இளவரசன் துட்டகைமனு, தன்னுடைய தந்தையின் பேச்சையும் மீறி அந்தத் தமிழ் மன்னன் மீது போர் தொடுக்க முடிவு செய்தான்.
தன்னிடம் எஞ்சியிருந்த சிங்கள வீரர்களை வைத்துப் போர் தொடுத்தான். அவனுடைய படையினர் வெற்றியும் பெற்றனர். இறுதியில் அந்த வீரம்மிக்க இளம் துட்டகைமனு அந்தத் தமிழ் மன்னனுடன் அனுராதபுரத்தில் வைத்து நேருக்குநேர் போரிட்டான்.
கடுமையாக நடைபெற்ற அந்தப் போரின் இறுதியில் அந்தத் தமிழ் வீரன் இறந்து போனான். வீரனென்றாலும் நல்ல உள்ளம் படைத்த துட்டகைம்மனு இறந்த அந்த மாவீரனின் உடலை அரசனுக்கே உரிய முறையில் தகனம் செய்தான். அந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னமும் எழுப்பினான். அந்த இடத்தைக் கடந்து செல்பவர்கள் யாராயிருந்தாலும் இறங்கி தலை குனிந்து செல்ல வேண்டும் என்றும் ஆனையிட்டான் துட்டகைம்மனு. அந்த நினைவுச் சின்னம் இன்றும் இலங்கை அனுராதபுரத்தில் உள்ளது. வீரத்தை மதிக்கத் தெரிந்த அந்த வீர இளைஞன் துட்டகைம்மனுவுக்கு நமது வாழ்த்துகள்.
அந்தப் போரில் வீரமரணம் அடைந்த அந்தத் தமிழ் வீரனைப் பெற்றதற்காகத் தமிழ்த் தாய் நிச்சயம் பெருமை கொள்ளலாம். தமிழர்களாகிய நமக்கும் அந்த மன்னன் பெருமை சேர்த்துள்ளான்.
சரி. ஒரு தமிழ் இளவரசன் கடல் கடந்து சென்று ஈழ நாட்டை அடைந்து, அவர்களைப் போரில் வென்றான், நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்தான் என்ற வரை எல்லாம் நல்ல செய்தி தான். ஆனால் ஒரு ஈழ இளவரசனிடம் நேருக்குநேர் நடந்த போரில் வெல்ல முடியாமல் தோல்வியுற்று இறந்து போவதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? அதற்காக நாம் ஏன் பெருமைப் பட வேண்டும் என்று ஒரு கேள்வி நம்மிடம் எழலாம்.
அதற்குப் பதில் இது தான்.
துட்டகைம்மனு என்ற சிங்கள அரச குடும்பத்து இளைஞனுடன் போரிட்டு இறந்து போவது தமிழ் இனத்தைப் பெருமைப்படுத்தும் சாதனை அல்ல தான். ஆனால் அந்தப் போரில் கலந்து கொண்டு நேருக்குநேராக அந்த இளம் இளவரசனை எதிர்த்துப் போரிட்டதே தமிழினத்திற்குப் பெருமை தான். ஏனென்றால் அந்த ஈழ இளவரசனுடன் வாளெடுத்து நேருக்குநேராகப் போரிட்டபோது அந்தத் தமிழ்த்தாய் பெற்ற தவப்புதல்வனின் வயது 75.
இப்போது சொல்லுங்கள், அந்த வீரனால் தமிழினத்திற்கே பெருமை தானே?
அந்தத் தமிழ் மன்னனின் பெயர் எல்லாளன்.
Monday, March 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment