Wednesday, March 5, 2008

அரச கட்டளை

கி.பி. 1169. திருவள்ளுவர் ஆண்டு 1200.

இன்றைய மதுரையைத் தலைமையாகக் கொண்ட பாண்டிய நாடு ஒரு பெரும் சிக்கலில் தவித்தது. குலசேகரபாண்டியனும் பராக்கிரமபாண்டியனும் பாண்டிய நாட்டின் அரசுரிமைக்காகக் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு தான் என்றாலும் இம்முறை பராக்கிரமபாண்டியன் ஒரு மிகப் பெரிய தவறைச் செய்தான்.

இலங்கை நாட்டு மன்னன் பராக்கிரமபாகு என்பவனின் உதவியை நாடினான். நமக்குள் உள்ள சண்டையை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும், வேறு நாட்டுக்காரனை தலையிட விடக் கூடாது என்ற எண்ணம் இல்லை. இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல இலங்கை மன்னன் பராக்கிரமபாகு தன்னுடைய தளபதி லங்காபுரனின் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பினான். அதற்குள் குலசேகரனின் படைகள் பராக்கிரமபாண்டியனை கொன்றது. இருப்பினும் லங்காபுரன் ராமேஸ்வரம் வழியாகத் தமிழகத்தினுள் நுழைந்து ஒவ்வொரு இடமாகக் கைப்பற்றினான்.

அவனுடைய எண்ணம் குலசேகரனிடமிருந்து மதுரையைக் கைப்பற்றி பராக்கிரமனின் மகன் வீரபாண்டியனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தான். லங்காபுரன் ஓரளவு வெற்றியும் பெற்றான். ஆனால் மொத்தம் இரண்டு தவறுகள் நிகழ்ந்தன.
ஒன்று: மதுரை உள்பட பாண்டியநாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றி ஊர்களை அழித்ததோடு நில்லாமல், சோழ நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றிய லங்காபுரன், போரில் தோல்வியுற்ற தமிழ் வீரர்களைக் கொலை செய்தான். ஊர்களை ஆழிக்க ஆரம்பித்தான்.

இரண்டு: குலசேகரன், சோழ மன்னனாகிய இரண்டாம் ராஜாதிராஜனின் உதவியை நாடினான்.

விளைவு இது தான்:

தமிழ் வீரர்களுக்கு நிகழ்ந்த கொடுமையும், சோழ மண்டலத்தைச் சுற்றியுள்ள சில ஊர்கள் அழிக்கப்பட்ட தகவலையும் அறிந்த சோழன் ராஜாதிராஜன் தன்னுடைய தளபதிக்கு இவ்வாறு கட்டளையிட்டான்.

"நம்முடைய தமிழ் வீரர்களையும் கொன்று, நம்முடைய ஊர்களையும் அழித்த அந்த இலங்கைப் படையை முற்றிலுமாக அழித்து, அந்த நாட்டுத் தளபதிகளின் தலையை எடுத்து மதுரை மாநகரில் ஆணியில் அடித்துத் தொங்க விட வேண்டும். அத்துடன் குலசேகரனை மதுரையில் ஆட்சிப் பொறுப்பில் அமர வைக்க வேண்டும்".

இதையறிந்த பராக்கிரமபாகு மேலும் படைகளை அனுப்பிக் கொண்டிருந்தான். ஆனால் என்ன செய்வது? பொதுவாகச் சோழ வீரர்கள் போர் என்றாலே ரத்த வெறியுடன் இருப்பார்கள். அப்படி இருக்கும் போது தன்னுடைய மன்னனே எதிரிகளின் தலையை அறுத்து ஆணியில் அடித்து வை என்று கூறி விட்டால் கேட்கவா வேண்டும்?

சோழ நாட்டு வீரத்தைப் பல முறை இலங்கை வீரர்கள் பார்த்தவர்கள் தான். ஆனால் இம்முறை தமிழ் மண்ணில் வைத்து நேரடியாகக் கண்டார்கள்.

சோழத்தளபதியின் நேர்த்தியான திட்டமிடும் அறிவையும், வெறி கொண்ட வேங்கையாய்த் தாக்கும் அவனுடைய வீரத்தையும் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சோழப்படைகள் ஒவ்வொரு பகுதியாக இலங்கை வீரர்களிடமிருந்து கைப்பற்றின. சோழத்தளபதி இலங்கைப் படையைத் தோற்கடிக்க விரும்பவில்லை. மாறாக அழிக்கவே விரும்பினான். அதைச் செய்தும் காட்டினான். இலங்கைத் தளபதிகளிடமிருந்து மதுரையைக் கைப்பற்றி குலசேகரனிடம் ஆட்சியையும் ஒப்படைத்தான்.
அத்துடன் நில்லாமல், பராக்கிரமபாகு மீண்டும் தன்னுடைய மன்னனுக்கும், குலசேகரனுக்கும் தொல்லை கொடுப்பான் என்று கருதிய அந்த வீரத் தளபதி கடல் கடந்து சென்று பராக்கிரமபாகுவின் கடற்கரையோர நகரங்களைக் கைப்பற்றி அழித்தான்.முழு வெற்றி கிடைத்து விட்டது. இனி அவன் சோழ நாடு திரும்பலாம் தானே?

இல்லை!!

இன்னும் ஒரு வேலை மிச்சம் இருந்தது. எந்தத் தளபதிகளின் ஆனைப்படி இலங்கை வீரர்கள் போரில் தோல்வியுற்ற தமிழ் வீரர்களைக் கொடூரமாகக் கொன்றார்களோ, அந்தத் தளபதிகள் அத்தனை பேரையும் கொன்றான் சோழத்தளபதி. பின்னர் அவர்களுடைய தலையை அறுத்து மதுரைமாநகரில் ஆணியில் அடித்த பிறகு தான் அவனது கடமையும் முடிந்தது; போர் வெறியும் தணிந்தது.

தன்னுடைய கட்டளைகள் மிக மிகத் துல்லியமாக நிறைவேறிய செய்தியை அறிந்த பின்பு தான் மன்னருக்கும் மகிழ்ச்சி. தன்னுடைய மன்னனின் ஆனையைத் தன்னுடைய வீரத்தினால் நிறைவேற்றிய அந்த மாவீரனின் இயற்பெயர் "பல்லவராயன்" என்கிற "திருச்சிற்றம்பலம் உடையான் பெருமாள் நம்பி" ஆகும்.

தமிழர்களின் மானத்தைக் காத்து, தமிழனின் வீரத்தை அனைவருக்கும் உணர்த்திய அந்தத் தளபதியான மாவீரன் பல்லவராயன் என்ற பெருமாள் நம்பியைத் தமிழர்களாகிய நாம் நினைத்து நினைத்துப் பெருமை கொள்வது தவறில்லை தானே?

வாழ்க மாவீரன் பெருமாள் நம்பியின் புகழ்!!
வாழ்க வீரர்களைப் பெற்ற தமிழ்த் திருநாடு...

1 comment:

Anonymous said...

where do you get this information? any specific books about TN history? If so give that in ur blog.